×

சர்வதேச தீவிரவாத இயக்கங்களுக்கு ஆள் எடுக்கும் மையமானது கேரளா: டிஜிபி லோக்நாத் பெஹ்ரா பகீர் தகவல்

திருவனந்தபுரம்:  ஐஎஸ்ஐஎஸ் உள்பட பல சர்வதேச தீவிரவாத இயக்கங்களின் தேர்வு மையமாக கேரளா மாறி உள்ளது என்று டிஜிபி லோக்நாத் பெஹ்ரா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கேரள சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருப்பவர் லோக்நாத் பெஹ்ரா. கடந்த 2016ம் ஆண்டு பினராய் விஜயன் முதன் முதலாக முதல்வரானபோது, லோக்நாத் பெஹ்ரா டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இவர் வரும் 30ம்தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார் . இந்நிலையில் அவர் திருவனந்தபுரத்தில் கூறியதாவது: இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலங்களில் கேரளா முன்னிலையில் உள்ளது. ஆனாலும் சில பகுதிகளில் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை என்று கூற முடியாது. கடந்த சில  வருடங்களாக கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளது.

போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சில மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டதற்கு சில கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் அதில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. நான் என்னுடைய கடமையைதான் செய்தேன். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சீருடை அணிந்து வருபவர்கள் நிரபராதிகள் அல்ல. மாவோயிஸ்ட்டுகள் திருந்துவதற்கு  பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை. ஐஎஸ்ஐஎஸ் உள்பட பல சர்வதேச தீவிரவாத இயக்கங்களுக்கு கேரளா ஒரு தேர்வு மையமாக மாறி உள்ளது. கேரளாவில் டாக்டர்கள், இன்ஜினியர்கள் உள்பட படித்தவர்கள் அதிகமாக இருப்பதுதான் இதற்கு காரணமாகும். அவர்கள் படித்தவர்களை குறிவைத்து மூளை சலவை செய்து தங்களது இயக்கத்திற்கு ஆட்களை சேர்க்கின்றனர்.

கல்வி அறிவு பெற்றவர்கள் கூட தீவிரவாதிகளாக மாறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீவிரவாதிகளுடனான மலையாளிகளுக்கு ஏற்பட்டுள்ள தொடர்பு கவலையை ஏற்படுத்துகிறது. கேரளாவில் ஸ்லீப்பர் செல்கள் இல்லை என்றும் கூற முடியாது. கேரள போலீசார் பல தீவிரவாத செயல்பாடுகளை முறியடித்துள்ளனர். அவை என்னென்ன என்பது குறித்து விளக்கமாக கூற முடியாது. ஆனால் கேரள மக்கள் எதற்கும் அச்சப்பட தேவையில்லை. எந்த நிலைமையையும் சமாளிக்கும் வகையில் கேரள போலீசார் விழிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். எனக்கு சிபிஐ இயக்குனராகும் வாய்ப்பு கிடைக்காதது வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  கேரள டிஜிபி பதவியில் இருந்து இன்னும் ஒரு சில தினங்களில் ஓய்வு பெற உள்ள லோக்நாத் பெஹ்ராவுக்கு சிபிஐ இயக்குனராக வாய்ப்பு இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் அந்த வாய்ப்பு பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kerala ,DGP ,Loknath Behra Pakir , Kerala: DGP Loknath Behra Pakir informs
× RELATED மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்